Saturday, August 1, 2009

எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்.

எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்.
[ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 03:32 பி.ப]

"வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது" என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.
"கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரம் மக்கள் வீதிகளில் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளையில் கடுமையாக காயமடைந்த 25 ஆயிரம் பேர் மருத்துவ பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் அங்குள்ளார்கள். எமது மக்களைப் பாதுகாப்பதே இப்போதுள்ள அவசரமான பணியாகும்" எனவும் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அவசர அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"இதனைக் கவனத்திற்கொண்டு எமது மக்களைப் பாதுகாப்பதற்காக எமது துப்பாக்கிகளை மெளனமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்ற எமது நிலைப்பாட்டை உலகத்துக்கு நாம் ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம்" எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் பத்மநாதன் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:
"சிறிலங்காவின் ஆயுதப் படையினரால் எமது மக்கள் ஈவிரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு உலகத்தில் உள்ள நாடுகளை நாம் கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், எமது இந்தக் கோரிக்கை யாருடைய காதிலும் விழவில்லை.
போர் இடம்பெறும் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பதற்கும் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எமது மக்களின் முடிவில்லாத ஆதரவையும் உதவியையும் தவிர எமக்கு எந்த உதவியும் இல்லாத நிலையில் சிங்களப் படையினர் முன்னேறியபோது நாம் பின்வாங்க வேண்டியேற்பட்டது.
எமது மக்கள்தான் இப்போது குண்டுகளாலும் எறிகணைகளாலும் நோய்களாலும் பட்டினியாலும் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மேலும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம். எமது அப்பாவி மக்களுடைய இரத்தம் தொடர்ந்தும் சிந்தப்படுவதை எம்மால் சகித்துக்கொள்ள முடியாது.
விடுதலைப் புலிகள் அமைப்பானது கடந்த மூன்று தசாப்த காலமாக சிறிலங்கா இராணுவத்துடன் போரிட்டு, இந்தத் தீவில் வசிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரிமையைப் பெற்றிருந்தது. 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் தொடங்கிய சமாதான முயற்சிகளில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறிய பின்னர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்வை நாடியது.
2007 ஆம் ஆண்டில் போர் தீவிரமடைந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மரணமடைந்திருக்கின்றனர். வடபகுதியில் இராணுவம் தனது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியதையடுத்து பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பட்டினியாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையாலும் மேலும் பலர் மரணமடைந்திருக்கின்றனர்.
"இந்தக் கொடூர நிகழ்வுகளை நிறுத்துவதற்கு எமது வரையறைக்கு உட்பட்ட எதனையும் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். இது எமது ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதுடன், சமாதான நடைமுறைக்குள் பிரவேசிப்பதாக இருந்தாலும் அவற்றுக்கு நாம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருக்கின்றோம்.
இன்றைய தருணத்தில் இதுதான் தேவை. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுடைய உயிர்களைப் பாதுகாக்க முடியுமாயின் அது செய்யப்பட வேண்டும்.
எமது மக்களுக்காகத்தான் நாம் போராடுகின்றோம் என்பதை நாம் மறந்துவிடவில்லை. தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில், எமது மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு இந்த போரை சிங்கள அரசு பயன்படுத்துவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது.
நாம் எமது துப்பாக்கிகளை மெளனிப்பதற்கு தயாராவிருக்கின்றோம். எமது மக்களைப் பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தொடர்ந்தும் கோருவதைவிட எம்மிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லை."
இவ்வாறு பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments: